மதுரை யம்பதி மானுடம் தந்தது; காடுகள் கரைகள் கால்கள் கடந்தது ஞானமும் அறிவும் நல்லோர் தந்தது நமசிவாயமே நாவில் நின்றது சகலமும் கற்று சதாசிவமானது ;பிரும்மத்தை உணர்த்தி பிரும்மேந்திரரானது இறையை இசையால் வடித்து தந்தது; எங்கும் காண்பவர் காட்சியானது மாயம் செய்தது மனதில் நின்றது; வாதில் வென்றது மௌனமானது புதுகை மண்ணில் புதுமை செய்தது ; கருவூர் வந்தது கருனை கொண்டது நெருவூர் சென்று நிலைத்து நின்றது ;காவிரி மண்ணில் காயம் மறைத்தது காலகாலமாய் காத்து நிற்பது, கருணை மழையே சதாசிவமானது
சிந்தை முழுவதும் எந்தன் கணபதி, செந்தூர் வேலன் தமையன் கணபதி, தாயின் செல்லப் பிள்ளை கணபதி, தருவான் எதையும் தந்த கணபதி, எதிலும் என்றும் முதல்வன் கணபதி, எல்லாம் தருவான் செல்வ கணபதி, அன்னை லட்சுமியின் அன்பு கணபதி, அள்ளித் தருபவன் லட்சுமி கணபதி, வெற்றித் திருமகன் வீர கணபதி, வேலவன் அண்ணன் பாச கணபதி, வேண்டும் வேண்டும் எங்கும் கணபதி, வேண்டி நின்றோம் உன்னை கணபதி
நீயும் வந்தாக வேண்டும் நின்று எமைக் காக்க வேண்டும் வானின் மழையாகி வானவில் காட்டி வாணி வந்தாக வேண்டும், கவிதை தந்தாக வேண்டும் கலைகள் கொண்டாட வேண்டும் கண்கள் காண்கின்ற காட்சி வழிநின்று கனவை மொழியாக. நாங்கள் தந்தாக வேண்டும், வாணி வந்தாக வேண்டும், ஆடும் காலாக வேண்டும் அரங்கம் உனதாக வேண்டும் மனது கொண்டாடும் மகிழ்வை கொண்டாட மண்ணில் நின்றாட. ஆடும் காலாக வேண்டும், வாணி நீயாக வேண்டும், வானை வென்றாக வேண்டும் வழியாய் நீயாக வேண்டும் விண்ணை மண்ணோடு விரைந்து இணைத்திங்கு வாழும் வழிகாண வாணி வழியாக வேண்டும், வாணி வந்தாக வேண்டும் வளங்கள் தந்தாக வேண்டும் வாணி வென்றாள வேண்டும்
Comments
Post a Comment