ஈசன் தந்த காட்சி
கரங்கள் காட்டும் கருணை மழையில் கரைந்து போனோம் இன்று,
கண்கள் காட்டிய காட்சியால் உள்ளம் உறைந்து போனோம் நின்று,
எத்தனை அழகிய காட்சியை தந்தான் ஈசன் எம்முன் வந்து,
தாயுடன் குழந்தைகள் கொண்டவன் கோலம் கொள்ளை கொண்டது இன்று,
கங்கை மங்கை கணேசன் குமரன் கண்டோம் ஒன்றாய் இன்று,
காலமகன் அவன் காட்டிய கருனை என்றும் நிலைக்கும் நின்று,
ஒலிக்கும் உடுக்கை கேட்டு சீறும் நாகம் கழுத்தில் நின்று,
ஓம் என்றும் ஒலிக்கும் இதயத்தில் இனிக்கும் ஈசன் நாமம் இன்று,
மூன்றாம் பிறையும் மூன்றாம் கண்ணும் உரைக்கும் தத்துவம் ஒன்று,
நெருப்பாய் எரிந்து நீராய் குளிரும் நிலைக்கும் வாழ்வு என்று,
காளையும் மயிலும் மூசிகமும் உணர்த்தும் உண்மை ஒன்று,
பல்லுயிர் போற்றும் பாரே நமக்கு என்றும் வேண்டும் என்று,
காட்சியில் உண்மை காட்டிய தலைவன் பாதம் பணிந்தோம் நின்று,
நமசிவாயமே நாளும் காப்பாய் நல்லது தெளிந்தோம் இன்று!
Comments
Post a Comment